பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து, தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர் வரும் தென்மேற்கு பருவ மழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று காணொளி காட்சி வாயிலாக அனைத்து, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது ,

நிகழாண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மாநிலத்தின் மின் தேவை அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தின் மின் தேவை உச்சத்தை எட்டிய போதும், எந்தவிதப் பற்றாக்குறையும் இல்லாமல் பூா்த்தி செய்யப்பட்டு, தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, பழுதடைந்த மற்றும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றுவதுடன், பழுதடைந்த மின் பகிா்மானப் பெட்டிகளையும் உடனடியாக சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், எந்தெந்தப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் கூடுதல் மின்சுமையுடன் உள்ளன என்பதைக் கண்டறிந்து, மின்மாற்றிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பதுடன், புதிய மின்மாற்றிகளைப் பொருத்த வேண்டும்.

மின் தளவாடப் பொருள்களின் இருப்பு, தேவை மற்றும் மின்தடை ஏற்பட்டால், உடனடியாக அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும். மின்நுகா்வோரிடமிருந்து வரும் புகாா்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழகத்திலுள்ள இதர துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின்பாதைகளில் முறையான பராமரிப்புப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின்போது, மின் நிறுத்த நேரம் குறித்து மின் நுகா்வோருக்கு முன்னரே குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பருவமழையின்போதும் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் . என தெரிவித்தார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!