பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதன்தோறும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்வதாக அறிவித்த காவல்ஆணையர் அருண், கடந்த புதன் அன்று புகார் மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார்.

அப்படி பெறப்பட்ட புகார் மனுக்களில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்த மனுக்களை தனியாக பிரித்து,`இந்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், சுணக்கம் காட்டினாலோ, அலைக்கழித்தாலோ, கையூட்டு பெற்றாலோ, ஒருதரப்புக்கு சாதகமாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், சிலநேரங்களில் போலீஸாரே ஆதாயம் பெறுவதாகவும், ஒருதலைபட்சமாக செயல்படுவ தாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியிருந்தாலோ, கைது நடவடிக்கை மேற்கொள்ள இருந்தாலோ அதுகுறித்து தனதுகவனத்துக்கு வந்த பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அருண், அப்பிரிவு போலீஸாருக்கு கண்டிப்பு காட்டியுள்ளார். இதுபோல், காவல்துறை விசாரணை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்