போலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் – கவர்னர் உத்தரவு

தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட இணை பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்ற இருப்பதாக அறப்போர் இயக்கம் வெளிக்காட்டி இருந்தது. இதுதொடர்பான சில தகவல்களையும் அது வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மோசடி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் எந்தெந்த கல்லூரிகளில் இந்த மோசடி நடந்திருக்கிறது. எத்தனை பேராசிரியர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக விளக்கம் தர உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறும் தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இதுதொடர்பாக முதல்கட்ட அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை அழைத்து விசாரணையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக அறிக்கையின் அடிப்படையில் கவர்னர் ஆர் என். ரவி, சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரிகள் தவறு செய்து இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்