மகாராஷ்டிரம்: அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிரத்தில் உள்ள அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரத்தில் உள்ள புரன்மல் லஹோட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் 324 மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் சனிக்கிழமை (அக். 5) இரவு உணவாக சாதம், சப்பாத்தி, வெண்டைக்காய் குழம்பு, பருப்பு சூப் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 7 மணியளவில் உணவருந்திய மாணவிகளுக்கு இரவு 8.30 மணியளவில் வாந்தி வருவதுபோல இருந்துள்ளது; சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 20 பேருக்கு குணமாகிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக். 6) காலையில் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டனர். இருப்பினும், 30 பேர் தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், எவரும் மோசமான நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: வைரத் தொழிலில் கடும் நெருக்கடி: 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை!

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். ஆய்வின் அறிக்கை வெளியானவுடன்தான், உணவின் நச்சுத்தன்மை குறித்து தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனைக்கு சென்று மாணவிகளின் உடல்நிலை குறித்து விசாரித்த எம்.பி. சிவாஜி கல்கே, மாவட்ட ஆட்சியரான வர்ஷா தாக்கூர் குகேவை தொடர்புகொண்டு, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!