புது தில்லி: நவராத்திரியின் எட்டாவது நாளான மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, இன்று காலை நாடு முழுவதுமிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டன.
ஏராளமான மக்கள் கோயில்களுக்கு வந்து சுவாமியை வழிபாடு செய்தனர். குறிப்பாக துர்கை அம்மன் கோயில்களில் மிகச் சிறப்பான வழிபாடு செய்யப்பட்டது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மகா அஷ்டமி மற்றும் ஆயுதபூஜை பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரியின் எட்டாவது நாள் துர்கா பூஜையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கோயில்களிலும், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
குஜராத் மக்கள் பல இடங்களில் கர்பா நிகழ்ச்சிகளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். துர்கை அம்மனை வழிபடும் வகையில் கர்பா நடனங்கள் ஆடி கடவுளை வழிபட்டு வருகிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் ராம் லீலை எனப்படும் நிகழ்ச்சியும் நவராத்திரியை முன்னிட்டுக் கொண்டாடப்படுவது வழக்கம்.