தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றிரவு முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ரத்தன் டாடா மறைவு
முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்ததாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் அஞ்சலி
மறைந்த ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்குக்கு கொண்டு வரப்படும் ரத்தன் டாடாவின் உடலுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க : ரத்தன் டாடா காலமானார்!
முழு அரசு மரியாதை
ரத்தன் டாடாவின் தைரியமான அணுகுமுறை மற்றும் சமூக அர்ப்பணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.