மசாஜ் மையத்தில் விபசாரம்… வேலை தருவதாக அழைத்து வந்து கொடுமை

பெங்களூரு,

பெங்களூருவில் வேலை தருவதாக அழைத்து வந்து பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் சம்பவங்கள் அண்மை காலங்களில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் மசாஜ் மையம் ஒன்று செயல்படுகிறது.

அந்த மையத்தில் விபசாரம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திராநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று முன்தினம் மசாஜ் மையத்திற்கு போலீசார் வந்தனர். அவர்கள் அந்த மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதியானது. மேலும் வெளிமாநில பெண்கள் 2 பேர் விபசாரத்தில் தள்ளப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள் 2 பேரும் உத்தரபிரதேசம் மற்றும் நாகாலாந்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதற்கிடையே அங்கிருந்த மணி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் மசாஜ் மையத்தின் மேலாளர் என்பது தெரியவந்தது.

மேலும் அவரும், மசாஜ் மையத்தின் உரிமையாளர் உபேன்ராதி என்பவரும் சேர்ந்து வடமாநிலங்களை சேர்ந்த பெண்களை, வேலை தருவதாக கூறி அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்தது. போலீசாரின் சோதனை பற்றி அறிந்தவுடன் மசாஜ் மையத்தின் உரிமையாளர் உபேன்ராதி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை இந்திராநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளர் உபேன்ராதியையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related posts

ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான 62 ஆயிரம் வழக்குகள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் – அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் பலி