மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்ட தலைமையகத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தனியாக வசித்து வந்த மெய்தி இனத்தைச் சேர்ந்த முதியவரின் வீட்டிற்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதைத்தொடர்ந்து குக்கி, மெய்தி இனக் குழுக்கள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
சர்ச்சை பேச்சு: சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது
இந்த சண்டையில் இருத்தரப்பை சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதில், நான்கு குக்கி சமூகத்தைச் சேர்ந்தவரும், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.
பின்னர், இந்த வன்முறை ரஷீத்புர் வரை தீவிரமடைந்தது. அங்கு காலை 9.50 மணி வரை இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது.
இந்த மோதல்கள் காரணமாக அந்த பகுதியில் நிலைமை பதட்டமாக இருந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
அசாம் எல்லையில் அமைந்துள்ள ஜிரிபாம் மாவட்டத்தில், மெய்தி, குக்கி பழங்குடியினர், நாகாக்கள் மற்றும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.