மணிப்பூர் மாநிலத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால், வன்முறையை தடுக்க ’இரட்டை இன்ஜின்’ அரசு எதுவும் செய்யவில்லை.
அனைத்து சமூக மக்களிடமும் மணிப்பூரில் அமைதியும் இயல்புநிலையும் திரும்பும் என்ற நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
”அதைத் தொடர்ந்து, அடுக்கடுக்கான கேள்விகளையும் பிரதமரிடம் எழுப்பியுள்ளார் கார்கே.
வன்முறை சம்பவங்கள் அதிகரித்தும், மணிப்பூர் முதல்வரை பதவியிலிருந்து நீக்காமல் இருப்பது ஏன்?
மோடி ஜி, இந்த அளவுக்கு குற்ற உணர்ச்சியற்றவராகவும், இரக்கமற்றவராகவும் இருப்பது ஏன்?
மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்வது குறித்து கவலைப்படாமல் இருப்பது ஏன்?
உங்களுடைய ஆணவத்தால் அனைத்து சமூக மக்களும் அவதியுறுகின்றனர்.”
“வெட்கமற்ற உங்கள் அரசால், அமைதியை நிலைநாட்டுவதற்கான அடிப்படை நடவடிக்கையைக் கூட எடுக்கத் தொடங்க முடியவில்லை.
மேற்கு இம்பாலில் ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல்கள் அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அதைப் பற்றி அகக்றையின்றி இருக்கிறார்.
உங்களுடைய பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களுடைய வீடுகள் மீதும் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
நிவாரண முகாம்களின் அவல நிலைமை குறித்து மணிப்பூர் ஆளுநர் குரல் கொடுத்ததற்காக, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா?
மணிப்பூரில் நிகழ்ந்துள்ள கலவரங்களில் குறைந்தபட்சம் 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணிலடங்காதோர் காயமுற்றுள்ளனர். 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அவல நிலையில் உள்ள நிவாரண முகாம்களில் பரிதவிக்கின்றனர்.
இதனிடையே, உள்ளூரில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், மணிப்பூர் எல்லைகளில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் இப்போது உருவெடுத்துள்ளது.”
“பிரதமர் மோடி ஜி, நீங்கள் மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் வருந்தத்தக்க வகையில் தோல்வியடைந்துவிட்டீர்கள். இந்திய மக்களுக்கு நீங்கள் இழைத்துள்ள துரோக நடவடிக்கைகளில், உங்களின் நீண்ட துரோகப் பட்டியலில் மணிப்பூர் குழப்பமும் சேர்ந்துள்ளது.”