சேலம்: எடப்பாடி அருகே மதுபோதையில் காதலி வீட்டுக்கு சென்று கிணற்றில் குதித்தவரை மீட்டு காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, 4 முறை கிணற்றில் குதித்து மேலே வந்தவர் 5-ஆவது முறை குதித்தபோது மேலே வர முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கொங்கணாபுரம் அருகேயுள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற காதலன், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காதலியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலப்பட்டி அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி விட்டு 4 முறை குதித்தவர் 5 முறை மேலே வர முடியாமல் காதலன் தவித்துள்ளார்.
இது குறித்து காதலியின் உறவினர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கும் எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காதலனை உயிருடன் பத்திரமாக மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் போலீசார் காதலனுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.