மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு! திருமாவளவன்

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அக். 2-ஆம் தேதி நடந்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் இன்று அழைப்பு விடுத்தார்.

முதல்வர் உறுதி

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“முதல்வரின் அமெரிக்க சுற்றுப் பயணத்துக்கான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவரிடம் தெரிவித்தோம். பல ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக முதல்வரின் பயணம் உள்ளது.

விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பை முதல்வருக்கு வழங்கினோம். இந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

திமுக கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை என்றும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார். மதுவிலக்கு அமல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கினேன்.

திமுக – விசிக கூட்டனியில் எந்த விரிசலும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. முதல்வருடனான சந்திப்புக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ – மீண்டும் விடியோவை வெளியிட்ட திருமாவளவன்!

முன்னதாக மது ஒழிப்பு மாநாட்டில் ஜாதி, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக அவா் பேசிய விடியோ வெளியிடப்பட்டு, பின் நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமாவளவன் பேசினார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்