மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக பணிக்கொடை வழங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்: மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கும் பணிக்கொடையினை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட தலைவருமான கவிஞர் சிங்காரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1.1.2024-ம் தேதி முதல் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக பணிக்கொடை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையையும் 1.1.2024-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
அதேபோல் மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 300-யை ரூ1000-மாக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் மஸ்தூர் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பணி வழங்கப்பட வேண்டும். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.