மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு.. மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்

மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு ஆனந்த் தகராறு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே திரவியபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் இருதயமணி (வயது 55), விவசாயி. இவருடைய மகள் மரிய விண்ணரசி. இவருக்கும், தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த் (26) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனந்த், தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனந்த் அடிக்கடி மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை மரிய விண்ணரசி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு மரிய விண்ணரசி கணவரிடம் கோபித்து கொண்டு திரவியபுரத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார். பின்னர் ஆனந்த் அடிக்கடி மாமனாரின் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து வந்தார். ஆனாலும் கணவருடன் செல்ல மரிய விண்ணரசி மறுத்து விட்டார்.

நேற்று முன்தினம் மதியம் மாமனாரின் வீட்டுக்கு சென்ற ஆனந்த், மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தார். ஆனால் மாமனாரின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் அங்கிருந்து சென்ற ஆனந்த், இரவு 11 மணி அளவில் மீண்டும் மாமனாரின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் அருகே தோட்டத்தில் இருந்த இருதயமணியை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தோட்டத்தில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து இருதயமணியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருதயமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் ஆனந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த இருதயமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ஆனந்தை கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமனாரை மருமகன் அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!