மாநில சுயாட்சிக்காக அரசியல் சட்டத்தில் திருத்தம்; சட்ட முயற்சிகளை திமுக மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

மாநில சுயாட்சிக்காக அரசியல் சட்டத்தில் திருத்தம்; சட்ட முயற்சிகளை திமுக மேற்கொள்ளும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாக மேற்கொள்ளும் என்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற திமுக பவளவிழா, முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் மற்றும்திமுக தொடங்கப்பட்ட நாள் (செப்.17)ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில், ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

1949-ல் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், தற்போது பவள விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5.46 மணிக்கு வந்தார். தொடர்ந்து, மேடையில் பவள விழா, முப்பெரும் விழா தொடர்பான வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் உருவம், முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து அவரை வாழ்த்திப் பேசுவது போன்ற காட்சி திரையிடப்பட்டது.

இதன்பிறகு, மாலை 5.52 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. சுகாதாரத் துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, கலைஞர் அறக்கட்டளை சார்பில், கட்சியில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் மண்டலத்துக்கு 4 பேர் என 16 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பு, சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, பெரியார் விருதை பாப்பம்மாளுக்கு பதிலாக அவரது பேத்தி ஜெயசுதாவிடம் முதல்வர் வழங்கினார். பின்னர், அண்ணா விருதை அறந்தாங்கிமிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருதைஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும், பாவேந்தர் விருதை கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருதை வி.பி.ராஜனுக்கும், பவளவிழா ஆண்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் விருதைஎஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

75 ஆண்டில் எத்தனையோ சாதனை: விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். அதேநேரத்தில், நமது எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்றுகேட்டால் இல்லை. மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் போராட வேண்டிஉள்ளது.

ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையில்தான், தமிழகத்தை எல்லா விதங்களிலும் முன்னேற்றும் ஒற்றை இலக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணாவும், கருணாநிதியும் வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கை, நம் உயிர்நாடி கொள்கைகளில் ஒன்று. “நாம் கோட்டையில் இருந்தாலும், அங்கு இருக்கும் புல்லை வெட்டக்கூட உரிமை இல்லை” என்றார் கருணாநிதி.

இன்று க்ரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவுவரி போடுகிறீர்கள் என்று கேட்கக்கூட உரிமை இல்லாத நிலை உருவாகிஉள்ளது. இந்த சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்பைத்தான் இந்த பவள விழா செய்தியாக சொல்ல விரும்புகிறேன்.

குறைவான நிதிவளத்தை கொண்டே, நம்மால் இவ்வளவு சாதனைகளை செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதிவளம் கிடைத்தால், தமிழகத்தை அனைத்திலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும். எனவே, அனைத்து அதிகாரங்களும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாக மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழாவில், திமுக துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related posts

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்