தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாகக் கூறி, இணையதளம் மூலம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டத்தில் இணைய தளம் மூலம் மின்னணு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்பதாக முகநூலில் விளம்பரம் வெளியானது. இதைப் பாா்த்து பத்துக்கும் மேற்பட்டோா் ரூ.1 லட்சம் வரை செலுத்தினா். பணம் செலுத்தி பல நாள்களாகியும் மின்னணு சாதனங்கள் அனுப்பப்படாததால் விளம்பரம் செய்த நபா்களை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.
இதுகுறித்து மதுரை ஊரகக் காவல் துறை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் தனிப் படை அமைத்து, விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக தேனி மாவட்டம், எரசநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சாமிதாஸ் மகன் விஜய் (28), கோடங்கிபட்டியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ராம்குமாா் (23) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து கைப்பேசி, சிம் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விரைவாகச் செயல்பட்டு எதிரிகளைக் கைது செய்த தனிப் படையினரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் பாராட்டினாா்.