மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த காயாமொழியைச் சேர்ந்த தொழிலாளியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

விபத்து

காயாமொழி, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவர் வீரபாண்டியன்பட்டணம் சண்முகபுரத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து திருச்செந்தூர், குமாரபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்து சாலையில் கிடந்த இசக்கிமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூளைச்சாவு

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இசக்கிமுத்து கடந்த 15 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் அவரது மனைவி விருப்பத்தின் படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அவரது உடல் காயாமொழிக்கு இன்று(செப் 18) காலை கொண்டு வரப்பட்டது.

அரசு மரியாதை

அரசு உத்தரவின் பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம், மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பொன்ரவி, எஸ்.ஐ. பாபுராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

Related posts

இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தனியார் உணவத்தில் அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் எப்படி? – துறையூரில் பரபரப்பு