மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

சென்னை,

கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 30-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நேற்று இரவு 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பவர்ஹவுஸ் வழியாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியும், கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்