மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று காணொளி வாயிலாக பேசிய இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ”ஈரானின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், நாகரிகமடைந்த நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கவேண்டும். தற்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்குமாறு கூறுகின்றனர். இது அவர்களுக்கு அவமானம்” என்று கூறினார்.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூதிக்கள், ஈராக் மற்றும் சிரியாவில் ஷியாக்கள், மேற்கத்திய பயங்கரவாதிகள் போன்ற பலமுனைத் தாக்குதல்களால் இஸ்ரேல் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவது பெரிய பாசங்குத்தனம் என்றார்.

மேலும், ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: பிரெஞ்சு எரிவாயு நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

”பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகள் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால், அதனை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை விதிக்கின்றனர். என்ன ஒரு அவமானம்.

இஸ்ரேல் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிலோ அல்லது ஆதரவில்லாமலோ ஜெயிக்கலாம். ஆனால், அவர்களின் அவமானம் இந்தப் போரின் வெற்றிக்குப் பின்னரும் தொடரும்” என்று இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

தன்னுடைய பேச்சுக்கு எதிராக இஸ்ரேல் அதிபர் இவ்வாறு பேசியது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், “நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இது இஸ்ரேலின் பாதுகாப்பு உள்பட இது ஒரு தவறான புரிதலாகும். போர் எப்போதும் வெறுப்பையே வளர்க்கும். லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் பேச்சு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிரான்ஸ் அரசு, இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடாக பிரான்ஸ் இருப்பதாகவும், நெதன்யாகு தனது தீவிரமான கருத்தால் இரு நாடுகளின் நட்பு முறிவு குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு கத்தார், ஜோர்டான் நாட்டு அரசுகள் முக்கியமான முன்னெடுப்பாக வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!