மேற்கு வங்கத்தில் சிறுமி கடத்தப்பட்டுக் கொலை! பதற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில், பயிற்சி வகுப்புக்குச் சென்ற சிறுமி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமியின் உறவினர்கள், அருகில் இருந்த காவல்நிலையத்தை அடித்து நெறுக்கி, தீவைத்த சம்பவத்தால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் சம்பவம் பற்றி கூறுகையில், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில், மஹிஷமரி பகுதியைச் சேர்ந்த சிறுமி, வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்புக்காகப் புறப்பட்டுள்ளார். ஆனால், இரவு வரை அவர் வீடு திரும்பாததால், காவல்நிலையத்தில் அவர் காணாமல் போனதாக் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள வயல்வெளியில், சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், அச்சிறுமியின் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்நிலையத்தை சூறையாடி, தீ வைத்தனர்.

இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞர் மொஸ்டாகின் சர்தார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடல் கூறாய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகு தான், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!