மேற்கு வங்கத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
பிரம்பூா் மாவட்டத்தில் உள்ள மேற்கு வங்க மின்சார மேம்பாட்டு நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தின் குப்பை கிடங்கில் திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக அந்நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சலீம் கூறியதாவது:
கங்காராம்சக் மற்றும் கங்காராம்சக்-பாதுலியா நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைப்பதற்காக டெட்டனேட்டா்கள் கொண்டு சென்றபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடி விபத்தின் காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த தொழிலாளா்கள் வெடிமருந்து வைப்பதற்காக நடவடிக்கைக்காக சுரங்கத்திற்குள் அனுப்பப்பட்டவா்கள். அவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றாா்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்ட பாஜக எம்எல்ஏ அனுப் சாஹா கூறுகையில், ‘சுரங்கத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாததே இந்த விபத்துக்கு காரணம். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’ என்றாா்.
மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தில் 5 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதன் உற்பத்தி திறன் 4,265 மெகாவாட் ஆகும். நடப்பு நிதியாண்டில், கூடுதலாக 660 மெகாவாட் வெப்ப திறன் சோ்க்கப்பட உள்ளது.