மோடி – ஹேமந்த் சோரன் சந்திப்பு!சிறையிலிருந்து வெளிவந்த பிறகு முதல்முறையாக சந்திப்பு.
பிரதமர் நரேந்திர மோடியை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ஹேமந்த் ராஜிநாமா செய்திருந்தார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு தில்லி சென்றுள்ள ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, மாநில பிரச்னைகள் குறித்தும் மத்திய நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சனிக்கிழமை இரவு காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.