ம.பி: கோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து; சிறுவர், சிறுமிகள் 9 பேர் பலி

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலில் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது கோவிலின் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 9 குழந்தைகள் பலியாகினர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்தனர். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்த வீடு, கனமழையால் இடிந்து விழுந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவர் இடிந்து விழுந்ததில் 10 முதல் 15 வயதுடைய 9 சிறுவர், சிறுமிகள் பலியானதாக சாகர் பிரதேச ஆணையர் வீரேந்திர சிங் ராவத் தெரிவித்தார். சில சிறுவர்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டுள்ளன என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஆர்யா கூறினார்.

சிறுவர் சிறுமிகள் மறைவுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலியான குழந்தையின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்