யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

யூடியூபர் இர்ஃபான் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அவரது மனைவிக்கு சில நாள்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த விடியோவில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனியார் மருத்துவமனை, பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்ஃபான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

மன்னிப்பு கிடையாது

ஏற்கெனவே குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே வெளிநாட்டில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து பொது வெளியில் இர்ஃபான் வெளியிட்டதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அப்போது அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பிரச்னை முடித்து வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“குழந்தையின் தொப்புள் கொடியை அவரே அறுத்தது கண்டிக்கக் கூடியது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று மருத்துவர் அல்லாத நபர், தொப்புள் கொடியை அறுத்தது, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2021 பிரிவு 34-ன் படி மீறப்பட்டுள்ளது.

மருத்துவச் சட்டத்தை மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை அறுவை அரங்குக்குள் அவரை அனுமதித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் பயிற்சி பெற தடை விதிப்பதற்கான தமிழ்நாடு மருத்துவச் சங்கத்துக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை பொறுத்தவரை மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பு வழங்கப்படாது. மருத்துவத் துறை சார்பில்தான் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!