சின்னத்திரை நடிகை சத்யா தேவராஜன் புதிதாக திருமண மண்டபம் கட்டியுள்ளார்.
தனது கணவரின் நீண்டநாள் கனவு நிறைவேறத் துணையாக இருந்ததாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
திருமண மண்டபத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சத்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எதிர்நீச்சல் ஆதிரை
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சத்யா தேவராஜன்.
கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடர் எதிர்பாராத விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. தற்போது எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்நீச்சல் தொடரில் பரபரப்பாக பேசப்பட்டது ஆதிரை – கரிகாலன் திருமணம்தான். இதில் விருப்பமே இல்லாத ஆதிரையை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கரிகாலன் என்ற பொறுப்பற்ற நபருக்கு ஆதிகுணசேகரன் திருமணம் செய்து வைத்த காட்சிகளை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாலையிலேயே வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்டும் காட்சிகள் சின்னத்திரையில் முதல்முறை என்று கூட சொல்லலாம்.
இந்த மறக்க முடியாத காட்சியில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நின்றவர்தான் சத்யா தேவராஜன். இவர் இதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர்.
எதிர்நீச்சல் தொடர் முடிந்த நிலையில், தற்போது சத்யா புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார். தனது கணவரின் நீண்ட நாள் கனவாக இருந்த திருமண மண்டபத்தை சத்யா கட்டி முடித்துள்ளார்.
அதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கு சொந்தமாக சென்னையில் திருமண மண்டபங்கள் உள்ளன. அந்த வரிசையில் ரஜினி, விஜய் பாணியில் எதிர்நீச்சல் சீரியல் நடிகையும் தற்போது திருமண மண்டபம் ஒன்றை சொந்தமாகக் கட்டியுள்ளார்.
இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகைகள் நடிப்பதோடு மட்டுமின்றி சொந்தமாகவும் தொழில் தொடங்கி வருகின்றனர். நடிகை சைத்ரா ரெட்டி பால் பண்ணை தொடங்கி நடத்தி வருகிறார். நடிகை ஸ்நேகா, மைனா ஆகியோர் புடவைக் கடை நடத்தி வருகின்றனர்.