ரத்தன் டாடா மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், புதன்கிழமை இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.

டாடா நிறுவனத்தை உலகம் முழுவதும் விரிவடையச் செய்து நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் ரத்தன் டாடா. 1991 முதல் 2012 வரையில் டாடா குழுமத்தின் தலைவராக அவர் பதவி வகித்து வந்தார். அவருக்கு 2000 -ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2008-இல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

இந்த நிலையில் ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் முர்மு: ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது.

அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி: ரத்தன் டாடாவுடனான எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிரம்பியுள்ளது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு பிரச்னைகள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அவரது கண்ணோட்டங்கள் எனக்கு மிகவும் செழுமையாக இருந்தன.

நான் தில்லிக்கு வந்த பிறகும் இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி.

முதல்வர் ஸ்டாலின்: ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் ரத்தன் டாடா. இந்தியா ஒரு ஜெயிண்ட்டை இழந்துவிட்டது, ஆனால் அவரது பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic