ராகுல் குறித்த சமூக வலைதள விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி

ராகுலை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

குறிப்பாக சுப்மன் கில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் அதே தவறை 2-வது இன்னிங்சில் செய்யாத அவர் தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமானார்.

இந்த சூழ்நிலையில் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ராகுலை நீக்கி விட்டு சர்பராஸ் கானை பிளெயிங் 11-ல் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் இருப்பவர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் சமூக வலைதளங்கள் ஒரு பொருட்டே கிடையாது. சமூக வலைதளங்கள் அல்லது வல்லுனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்து நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அணி நிர்வாகம் மற்றும் தலைமை நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் மதிப்பிடப்படுவார்கள்.

இங்கே ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் மதிப்பிடப்படுகிறது. சமீபத்தில் கான்பூரில் கடினமான பிட்ச்சில் ராகுல் எங்களுடைய திட்டங்களுக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்ததாக கருதுகிறேன். நாம் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரியும். அவருக்கு அந்த திறன் இருப்பதாலேயே அணி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரவளிக்கிறது" என்று கூறினார்.

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme