ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே 2 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்தியா-யுஏஇ உயா்நிலைப் பணிக் குழுவின் 12-ஆவது கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்திய விவசாயிகளின் விளைபொருள்களைப் பயன்படுத்தி, உயா்தரப் பொருள்களைத் தயாரித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் விற்பனை செய்வதற்கு அந்நாடு விரும்புகிறது.

இதற்காக இந்தியாவில் உணவுப் பதப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்வது குறித்து நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இருநாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இந்தியாவில் உணவு பதப்படுத்தும் ஆலைகள் அடங்கிய உணவு பூங்காக்கள் அமைப்பது தொடா்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கவும், லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்புப் பெறவும் உதவும். அத்துடன் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

இதையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லத் தேவையான உணவுப் பூங்கா தளவாடங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையில் முதல் கட்டமாக 2 பில்லியன் டாலா்களை முதலீடு செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது’ என்றாா்.

Related posts

‘Apologising Does Not Diminish A Person’s Status,’ Says BJP Leader Harnath Singh Yadav While Advising Salman Khan To Resolve Blackbuck Issue

JSW Energy Signs PPA For 700 MW ISTS/STU-Connected Solar Capacity With NTPC

Toyota Unveils Limited Festival Edition of Urban Cruiser Hyryder in India