ரெயில் வரும்போது தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறை… என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

செங்கோட்டை,

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக மதுரைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று காலையில் வழக்கம்போல் குருவாயூரில் இருந்து புறப்பட்டு வந்தது. மதியம் 3 மணியளவில் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே தென்மலை-கழுதுருட்டி இடையில் ரெயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் ராட்சத பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்தது. அந்த வழியாக ரெயில் வந்தபோது இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர் உடனே சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். இதனால் தண்டவாளத்தில் பாறை கிடந்த இடத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்பாக ரெயில் நின்றது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் கிடந்த பாறையை அப்புறப்படுத்தினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் கிடந்த பாறையைப் பார்த்து என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்