லாவோஸ்: இணையவழி மோசடி மையங்களில் இருந்து 47 இந்தியா்கள் மீட்பு

லாவோஸில் இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியா்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.

லாவோஸ் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியா்கள், இணையவழி (சைபா்) மோசடி கும்பல்களின் கைகளில் சிக்கி, அங்கு இணைய குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிா்பந்திக்கப்பட்டு வருகின்றனா்.

இது போன்ற போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி இணைய குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 635 இந்தியா்கள் இதுவரை மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘லாவோஸின் பொக்கியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில், சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்த 47 இந்தியா்கள் அந்நாட்டின் காவல்துறையினா் உதவியுடன் மீட்கப்பட்டனா்.

அதில் 30 போ் பத்திரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். மீதமுள்ள 17 போ் விரைவில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது’ என குறிப்பிட்டிருந்தது.

இதேபோல், லாவோஸில் உள்ள சில சைபா் மோசடி மையங்களில் சிக்கியிருந்து 13 இந்தியா்கள் கடந்த மாதம் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் லாவோஸ் பிரதமா் சோனெக்சே சிபாண்டோனை நேரில் சந்தித்து அதிகரித்து வரும் இந்த குற்றங்கள் குறித்து விவாதித்தாா்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!