லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கைவினைப் பொருள்களை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.
லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டின் செழிப்பான கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களுக்கு கைவினைப் பொருள்களைப் பரிசாக வழங்கினார்.
இவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுக்கு மகாராஷ்டிரத்தில் மணிகளால் உருவாக்கப்பட்ட பெரிய வெள்ளி விளக்குகளை பரிசாக வழங்கினார்.
இந்தியாவின் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறனை உயர்த்திக் காட்டும் இந்தப் பரிசுகளில், லாவோ அதிபர் தோங்லூன் சிசோலித்துக்கு வேலைப்பாடுகளுடன் கூடிய பழங்கால பித்தளை புத்தர் சிலை, குடியரசுத் தலைவரின் மனைவி நலி சிசோலித்துக்கு ஸ்கார்ஃப் ஆகியவற்றை வழங்கினார்.
லாவோ அதிபர் சோனெக்சே சிபாண்டோன் மற்றும் அவரது மனைவிக்கு ராதா-கிருஷ்ணா புடைச்சிற்பம் ஒன்றையும் வழங்கினார்.
லாவோஸ் குடியரசுத் தலைவர் சிசோலித்துக்கு தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பித்தளையால் ஆன புத்தர் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார்.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு, ஹிமாலய பகுதியின் கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில், லடாக் பகுதியில் உருவாக்கப்பட்ட உயரம் குறைந்த மேசை ஒன்றை பரிசாக வழங்கினார்.
அதேவேளையில், ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு மேற்குவங்கத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளி மயிலை பரிசாக வழங்கினார்.
ஒவ்வொரு பரிசுப் பொருளும் ஒவ்வொரு கைவினைக் கலைஞரால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான கலாசாரத்தை எடுத்துரைப்பதாகவும், பல நூற்றாண்டு கலாசாரத்தை கொண்டாடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.