சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மின்தூக்கி மூலம் வாகனங்களை நான்காவது மாடியில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், வழக்கமாக வெள்ள நீர் தேங்கும் பகுதிகளில் குடியிருக்கும் வேளச்சேரி மக்கள் நேற்று காலை முதலே வேளச்சேரி மேம்பாலம், மேடவாக்கம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வரிசையாக கார்களை நிறுத்தத் தொடங்கினர்.
போக்குவரத்துக் காவலர்களின் எச்சரிக்கையை மீறியும், கார் வெள்ளத்தில் மூழ்கி செலவு செய்வதற்கு பதிலாக அபராதம் கட்டத் தயார் என்று வாகன உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க : வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
நான்காவது மாடியில் வாகனங்கள்
இந்த நிலையில், சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மழை வெள்ளத்துக்கு அஞ்சி மின்தூக்கி மூலம் நான்காவது மாடியில் இரு சக்கர வாகனங்களை குடியிருப்புவாசிகள் நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதேபோல், அடுக்குமாடியில் உள்ள ஒரு வீட்டின் ஹாலில் புல்லட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் புகைப்படமும் பரவி வருகின்றது.
ரெட் அலர்ட்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.