வங்காளதேசத்தில் இடைக்கால அரசு நாளை பதவியேற்பு

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் அதிபர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து வங்காளதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுசை நியமித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டார். இந்த நிலையில் வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கும் என்று ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராணுவ தளபதி, "இடைக்கால அரசின் பதவியேற்பு விழா நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம்" என்று கூறினார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்