வட்டமடித்த விமானம் முதல் பத்திரமாக தரை இறக்கிய விமானி வரை: திருச்சி திக் திக் நிமிடங்கள் – ஒரு பார்வை

வட்டமடித்த விமானம் முதல் பத்திரமாக தரை இறக்கிய விமானி வரை: திருச்சி திக் திக் நிமிடங்கள் – ஒரு பார்வை

திருச்சி: திருச்சியில் வெள்ளிக்கிழமை 141 பயணிகளுடன் 15 முறை வானில் வட்டமடித்த விமானத்தால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். 2 மணி நேரம் போராடி விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வாகனங்கள் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஃபெரி பிளைட் எனும் மாற்று விமானத்தில் 108 பயணிகள் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகள் விமானம்: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்.11) மாலை, 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது. 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக இந்த விமானம் ரன்வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த விமானத்தில் சக்கரங்கள் உள்ளிழுக்கவில்லை. உடனடியாக இதை கவனித்த விமானிகள், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஹைட்ராலிக் சக்கரம்: சக்கரங்களை உள்ளிழுக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தொடர்ந்து இயக்க விரும்பாத விமானிகள், திருச்சி விமான நிலையத்தை சுற்றி வட்டமிட துவங்கினர். அதன்படி, நேற்று மாலை, 5.45 மணி முதல், இரவு 8.10 மணி வரை, விமானம் திருச்சி வான் எல்லைப்பகுதிகளில் வட்டமிடத் துவங்கியது. தகவலறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப வல்லுனர்களும், விமானிகள் மூலமே அப்பிரச்சினையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை.

தரையிறக்குவதில் சிக்கல்: இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து பதற்றமாக விசாரித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், சக்கரம் விமானத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், விமானத்தை தரையிரக்குவதில் சிக்கல் இருக்காது என்று விமானிகள் திட்டமிட்டனர்.

வானில் வட்டமடித்த விமானம்: கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இறங்கும் போது அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், விமானத்தில் உள்ள பெட்ரோலை குறைக்க, புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை, அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, குளத்துார், கரூர் மாவட்டம், தோகைமலை ஆகிய பகுதிகளை, 15-க்கும் மேற்பட்ட முறை சுற்றி வந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தொடர்ந்து விமானம் சுற்றி வருவது எதனால் என்று அச்சமடைந்தனர்.

பயணிகள் பீதி: விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், விமான பயணிகளிடம் தொழில்நுட்ப கோளாறு குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும், விரைவில் திருச்சியில் விமானம் மீண்டும் தரையிறங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் பீதி அடைந்தனர்.

இதே நேரத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளையும், விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், உள்ளூர் போலீஸார் உள்ளிட்டோர் செய்தனர். 10-க்கும மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 18 ஆம்புலன்ஸ்கள், 20 டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

விமானம் தரையிறக்கம்: தொடர்ந்து இரவு, 8.10 மணி வரை விமானம் வானில் பறந்தபடி இருந்ததால், பயணிகளின் உறவினர்கள் திக்..திக் என்ற பீதியில் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் நீண்ட போராட்டத்துக்கு பின் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பத்திரமாக விமானத்தை தரை இறக்கிய விமானி மற்றும் விமான குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முதல்வர் பாராட்டு: இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது: “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார்நி லையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.

பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன். பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும்,” எனது பாராட்டுகள். என்று, முதல்வர் கூறியுள்ளார்.

மாற்று விமானத்தில் சென்ற பயணிகள்: இதற்கிடையில், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் உரையாடி நலம் விசாரித்து மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து திருச்சியிலிருந்து சார்ஜா செல்லக்கூடிய விமான பயணிகளுக்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஃபெரி பிளைட் எனப்படக்கூடிய பயணிகள் இல்லாத விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. நேற்று அதிகாலை, 2:20 மணிக்கு இந்த விமானம் 141 பயணிகளுடன் சார்ஜா நோக்கி பறப்பட்டது.அனைத்து பயணிகளும் மகிழ்ச்சியுடன் பத்திரமாக கிளம்பிச் சென்றனர்.

108 பேர் பயணம்… – திருச்சியில் இருந்து 108 பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சி- சார்ஜா செல்ல வேண்டிய பயணிகளில் 36 பேர் தங்களது பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். வேறு சிலர் சார்ஜா பயணத்தை ரத்து செய்து பயணத்தொகையை ஏர் இந்தியாவிடம் பெற்றுக் கொண்டனர்.

Related posts

கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது மரம் சாய்ந்து விபத்து: தப்பிய சுற்றுலா பயணிகள்

மழைக் காலத்தில் தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை: உணவுத்துறை செயலர் உத்தரவு

கலாம் பிறந்த நாள்: மதுரை – ராமேசுவரம் இடையேயான விழிப்புணா்வு சைக்கிள் பயணம் நிறைவு