வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

அதையொட்டி, கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை பிரியங்கா தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் உடன் இருப்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா் வயநாட்டில் பிரியங்கா, ராகுல் ஆகியோா் வாகனப் பேரணியும் நடத்த உள்ளனா். பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி