வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… தீவிர மீட்பு பணியில் ராணுவம்!
வயநாடு நிலச்சரிவு
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் முதன் முதலாக முண்டக்கை பகுதியில் தான் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, முண்டக்கைக்கு உட்பட்ட பூஞ்சரிமட்டம் என்ற கிராமத்தில் தான் மலைகளில் இருந்து பாறைகள், மண் துகள்கள் முதலில் சரிந்து விழுந்தன. தற்போது அந்த கிராமமே, மண்ணிற்குள் புதைந்து வீடுகள் இருந்ததற்கான சுவடே தெரியவில்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இக்கிராமத்தில் இருந்து மட்டும் 120க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாலங்கள் உடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், ஆற்று வழியாக ஜேசிபி இயந்திரம் மட்டும் கொண்டு செல்லப்பட்டது. யாரேனும் ஒருவரையாவது உயிரோடு காப்பாற்றி விட முடியாதா என்ற ஆதங்கத்தோடு ராணுவ வீரர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் 29 பேர் உட்பட 240 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சேறும், சகதியுமான இடங்களில் இயந்திரங்கள் உதவியுடன் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
kerala
,
Wayanad