வானிலை முன்னெச்சரிக்கை: அரசின் ‘TN-Alert’ செயலி அறிமுகம்
சென்னை: பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் ‘டிஎன் அலர்ட்’ செயலியை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான ‘டிஎன் அலர்ட்’ செயலி குறித்து முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, இந்த செயலியை இன்று எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டார்.
எளிய முறையில் இயங்கும் இந்த டிஎன் அலர்ட் செயலியில், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களை அறியும் வசதி உள்ளது. பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் குறித்த வானிலை முனனெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN– Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store–ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.