வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam