விடியோ பதிவிட்டது பற்றி தெரியாது.. தொல். திருமாவளவன் பதில்

மதுரை: எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியான விடியோ பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று வலியுறுத்தும் பழைய விடியோ ஒன்று இன்று காலை 8.45 மணிக்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இன்று காலை, அமெரிக்க பயணத்தை நிறைவு செய்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய நேரத்தில், எக்ஸ் தளத்தில் இந்த விடியோ பதிவிடப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் 11.30 மணிக்கு செய்தி வெளியிடப்பட்ட நிலையில், அந்த விடியோ நீக்கப்பட்டது. பிறகு, அந்த விடியோ ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் ஜனநயாகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற வரிகளுடன் மீண்டும் பதிவிடப்பட்டது. ஆனால், பதிவிடப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அது எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

விடியோ

ஏற்கனவே, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைத்ததால், திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவுக்கு இடையே மோதல் என்ற சலசலப்பு எழுந்த நிலையில், மறைமுகமாக திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், மதுரையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தொல். திருமாவளவனிடம், விடியோ பற்றி கேட்டதற்கு, பழைய விடியோ பதிவிடப்பட்டது குறித்து தெரியாது, எக்ஸ் பக்கத்தில் எனது அட்மின் பதிவிட்டிருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

மேலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாடு நீண்டகாலமாக உள்ளது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்