விராட் கோலி, அக்‌ஷர் படேல் அசத்தல்; தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு!

விராட் கோலி, அக்‌ஷர் படேல் அசத்தல்; தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு!டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.விராட் கோலிபடம் | AP

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 0 ரன்னில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் ஒரே ஓவரில் ரோஹித் மற்றும் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார். அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அக்‌ஷர் படேல். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அக்‌ஷர் படேல் அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின், விராட் கோலியுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார்.

துபே களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆண்ட்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்கோ ஜேன்சன் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்