மீரட்: சினிமாவில் கூட இப்படி ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்குமா என்று சந்தேகப்படும் வகையில், உத்தரப்பிரதேசத்தில், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் மீது குரங்குக் கூட்டம் பயங்கர தாக்குதல் நடத்தி சிறுமியை மீட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே உள்ளது பக்பத் ஊர். இங்கு மழலையர் பள்ளியில் படித்து வந்த ஆறு வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று ஆளில்லாத வீட்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், திடீரென, அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஓடி வந்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளன. இதனைப் பார்த்த அந்த நபர், குரங்குகளை விரட்ட முயன்றும், அவை ஆக்ரோஷமாக அந்த நபரைத் தாக்கியதில், அவர் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளார். இதனால், பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய சிறுமி, தனது வீட்டுக்கு ஓடி வந்து பெற்றோரிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கறார்கள்.
இதையும் படிக்க.. தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல்.. ஃபோன் மூலம் பயங்கரவாதியைக் கொன்ற 1996 சம்பவம்!!
சம்பவத்தின்போது, சிறுமி, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததும், அடையாளம் தெரியாத நபர், சிறுமியை தூக்கிச் செல்வதும் அங்கிருக்கும் விடியோவில் பதிவாகியிருக்கிறது. இதனைக் கொண்டு அந்த நபரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
ஒருவேளை, அந்தக் குரங்குக் கூட்டம் வந்திராவிட்டால், என் குழந்தைக்கு இன்னேரம் என்னாவாகியிருக்குமோ என்று சிறுமியின் தாய் கதறி அழுகிறார்.