எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 24) தெரிவித்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை–2024 மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட அணிகளுக்கு முதல்வர் கோப்பையை வழங்கி, பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்றால், அதற்கான திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதைத்தான் உதயநிதி செய்துக்கொண்டிருக்கிறார்.
உங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான எல்லா ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்ற உறுதியை இந்த மேடையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப்போட்டிகளில் பங்கேற்கும் இளம் திறனாளர்களை கண்டறிந்து, அவர்களை முறையாக பயிற்றுவிப்பதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் முக்கிய நோக்கம்.
எனது ஆட்சியில் விளையாட்டுத் துறையை பொழுதுபோக்காக பார்ப்பதில்லை.
விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க, எத்தனையோ திட்டங்களை நாங்கள் செயல்படுத்துகிறோம். கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிற்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு சரிசமமான முக்கியத்துவத்தை கொடுக்கிறது.
இதையும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம்!
விளையாட்டு என்பது, வெறும் போட்டி இல்லை; அது உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடியது! உங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதை ஊக்கப்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டார்.