விஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை – எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கள்ளக்குறிச்சி,

விஷ சாராய விவகாரத்தை கண்டித்து இன்றைய சட்டசபை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்துள்ள அ.தி.மு.க., மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

"கள்ளக்குறிச்சியில் முக்கிய திமுக பிரமுகர்கள் ஆதரவோடுதான் விஷ சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் தடை இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

கள்ளக்குறிச்சியில் 58 பேரின் உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். இந்த சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இங்குள்ள காவல் துறையால் நீதி கிடைக்காது. சிபிஐ விசாரணை வேண்டும்.

சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையை பற்றி பேச முற்பட்ட போது அனுமதி கொடுக்கவில்லை. முக்கியமான பிரச்சனைகளை பேசுங்கள் என கூறுகின்றனர். இதனை விட முக்கியமான பிரச்சனை என்ன இருக்கப்போகிறது?"

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்