இன்று மாலை 6 மணிக்கு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருமலை திருப்பதியில், சுவாமி பிரசாதம் தயாரிப்பில், விலங்கு கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட விவகாரத்தில், கோயிலை சுத்தப்படுத்தும் வகையில், இன்று மகாசாந்தி யாகம் நடத்தப்பட்டது. 8 அர்ச்சகர்கள், 3 ஆகம விதிப்படி பூஜை செய்யும் தலைமை அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் சமையலறை சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் புனிதமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், இன்று மாலை பக்தர்கள் வீடுகளில் 6 மணிக்கு விளக்கேற்றி க்ஷமா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என அர்ச்சகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஸ்ரீவாரி பக்தர்களும், க்ஷமா மந்திரத்தை உச்சரித்து, விளங்கு கொழுப்பு கலந்த பிரசாதத்தைப் படைத்ததால் ஏற்பட்ட தோஷம் விலகி, இறைவனின் திருவருளை பக்தர்கள் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
க்ஷமா மந்திரம்..
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ ஸ்ரீவெங்கடேஸாய எனத் தொடங்கும் மந்திரத்தை உச்சரித்து, மக்களும் வீடுகளில் பூஜை செய்யும்படி, திருப்பதி தேவஸ்தானம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மந்திரத்துடன் பதிவிட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது, ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் உறுதியானது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து, இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தார்.
இந்த நிலையில், திருப்பதி லட்டில், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பொருள்களும் கலக்கப்பட்டிருந்தது பேசுபொருளான நிலையில், திருப்பதி சமையல் கூடத்தை புனிதப்படுத்தும் பூஜைகள் இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க.. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: க்ஷமா பிரார்த்தனை ஏன்?
சமையல் கூடத்தில், மகாசாந்தி யாகம் முறைப்படி நடத்தப்பட்டு, சமையல் கூடம் ஆகம முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சுவாமிக்குப் படைக்கப்படும் பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு, தவறு நடந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தானமும் கூறியிருந்த நிலையில், இந்த யாகம் நடத்தப்பட்டுளள்து.
ஓரிடத்தை சுத்தப்படுத்தி புனிதப்படுத்தும் வகையில் நடத்தப்படும் யாகமே மகாசாந்தி யாகம். நடந்த தவறை சரி செய்து, கோவிலை புனிதப்படுத்தும் வகையில் இந்த மகாசாந்தி யாகம் நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.