நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் வெற்றிமாறனுடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி, பிரதர் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இறுதியாக, அவர் நடித்த சைரன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பிரதர் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
படத்தின் இயக்குநர் எம். ராஜேஷும் தொடர் தோல்விகளைக் கொடுத்துள்ளதால் எப்படியாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்புடன் இருக்கிறார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: இயக்குநர் பீம்சிங்கின் 100-வது பிறந்த நாள்… நடிகர் பிரபு நெகிழ்ச்சி!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜெயம் ரவி, ‘எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. நல்ல இயக்குநர்களிடம் சென்று எனக்கான கதை இருக்கிறதா எனக் கேட்க மாட்டேன். அவர்கள் இயக்கிய படம் நன்றாக இருந்தால், மனதிற்குள்ளேயே பாராட்டிக்கொள்வேன். இப்போதுதான் புரிகிறது அந்த இயக்குநர்களிடம் சென்று பேசியிருக்கலாம் என. அப்படி, சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து கதை இருந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர், அடுத்தடுத்து இயக்கவுள்ள தன் படங்களைக் முடித்ததும் கண்டிப்பாக இணைந்து பணியாற்றலாம் என்றார். அதேநேரம், விரைவில் அவருடைய கதை ஒன்றை கேட்க இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்,
இதனால், வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகியுள்ளது.