வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்: காசா மீதான தாக்குதலில் 70 பேர் பலி

3 வாரங்களுக்கு பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் தனது படைகளை வெளியேற்றியது.

காசா,

காசாவை தளமாக கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை அவர்கள் பணய கைதிகளாக கடத்திச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. சுமார் 8 மாதங்களாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. எனினும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் இஸ்ரேல் மீது காசா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது படையை நிறுத்தியது. பின்னர் அங்கு பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் முற்றிலும் அழிக்கப்படும் வரை தாக்குதல் நடத்தப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறினார்.

அதன்படி கடந்த 3 வாரங்களாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தற்போது தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றியது. இதனையடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளை சென்று பார்வையிட்டனர்.

அப்போது காசாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 70 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருந்தன. மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்