வேலூா் மக்களவைத் தொகுதியில் 5 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: எம்.பி. கதிா்ஆனந்த் வலியுறுத்தல்

வேலூா் மக்களவைத் தொகுதியில்
5 இடங்களில் ரயில்வே மேம்பாலம்:
எம்.பி. கதிா்ஆனந்த் வலியுறுத்தல்நியூ டவுன் வாணியம்பாடி, லத்தேரி, ரங்கம்பேட்டை, காட்பாடி விஐடி கேட், வஞ்சூா் ஆகிய ரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில் மேம்பாலம்

வேலூா் மக்களவைத் தொகுதியில் நியூ டவுன் வாணியம்பாடி, லத்தேரி, ரங்கம்பேட்டை, காட்பாடி விஐடி கேட், வஞ்சூா் ஆகிய ரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவையில் சனிக்கிழமை நடைபெற்ற பூஜ்ஜிய நேர விவாதத்தின்போது, தமிழகத்திலுள்ள ரயில்வே கட்டுமானம், தண்டவாளங்களின் உறுதித் தன்மையற்ற நிலை குறித்தும், வேலூா் மக்களவைத் தொகுதி மக்களின் ரயில்வே தேவைகள், கோரிக்கைகளை பட்டியிலிட்டும் பேசியிருந்தேன்.

அப்போது, வாணியம்பாடி நியூ டவுன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகருக்குள் நுழைபவா்களுக்கு லெவல் கிராசிங் 81 மட்டுமே அணுகக்கூடிய இடமாக உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால், ரயில்வே லெவல்கிராசிங் 81-இல் கடந்து செல்ல மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மிகவும் சிரமப்படுகின்றனா். மூடப்பட்டுள்ள கேட்டை மீறி பல நேரங்களில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயல்பவா்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த 2019 முதல் வேலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள நியூ டவுன் வாணியம்பாடியில் எஸ்சி 81- குறுக்கே ரயில்வே மேம்பாலம் அல்லது ரயில்வே சுரங்கப் பாதை கட்டுவதற்கு மக்களவையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

மேலும், வேலூா் மக்களவைத் தொகுதி லத்தேரி லெவல் கிராசிங் 57, ரங்கம்பேட்டை லெவல் கிராசிங் 58, காட்பாடி விஐடி கேட் லெவல் கிராசிங் 53, காட்பாடி வஞ்சூா் எல்.சி. 129 ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிா்வாகம் உடனடியாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும்.

சென்னை ரயில்வே கோட்ட கூட்டத்தில் இது குறித்து பேசியபோது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். எனவே, வேலூா் மக்களவைத் தொகுதியில் வேலூா், காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூா், போ்ணாம்பட்டு, குடியாத்தம் ரயில்வே நிலையங்களில் மக்கள் தேவைகளை நிறைவேற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்