ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் முதலீடுகளுக்கு 15 சதவீத வட்டி தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் ரூ. 4 ஆயிரத்து 620 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஹிஜாவு நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால் அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள முக்கிய நிர்வாகிகளான ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், எங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பாக இன்று (அக்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், “இந்த நிறுவனம் சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் சுமார் 4 ஆயிரத்து 620 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. இதில் 17 ஆயிரம் பேர் தான் இதுவரை புகார் அளித்துள்ளனர். மொத்தம் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.

ஏற்கெனவே இந்த வழக்கில் இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு தொகைகூட இதுவரை மீட்கப்படவில்லை முக்கிய குற்றவாளியான அலெக்ஸாண்டர் இன்னும் தலைமறைவாக உள்ளார். பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடைவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என வாதிட்டார்.அதையேற்ற நீதிபதி பி.தனபால், ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகளான 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

புளோரிடா மாகாணத்தை பந்தாடிய மில்டன் புயல்: 9 பேர் பலி

ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

லாவோஸ் நாட்டில் ராமாயண நாடகத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி