ஹீரோக்களின் லைன் அப்!

ஹீரோக்களின் லைன் அப்!விஷ்ணு விஷால்: புது படங்கள், புதிய கூட்டணிகள்!

விஷ்ணு விஷால் லைன் அப்!

"முண்டாசுபட்டி', "ராட்சசன்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதன் இயக்குநர் ராம்குமாருடன் கைகோர்த்துள்ளார் விஷ்ணு. இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் மூன்று ஷெட்யூல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. விஷ்ணுவின் ஜோடியாக "பிரேமலு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மமிதா பைஜூ நடித்து வருகிறார். இந்தாண்டு இதன் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து "கட்டா குஸ்தி' இயக்குநர் செல்லா அய்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கடுத்து "நெஞ்சுக்கு நீதி' அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷ்ணு. "களவு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முரளி கார்த்திக் இயக்கத்தில் "மோகன் தாஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் டைரக்ஷனில் "ஆர்யன்' என்ற படத்திலும் நடிக்கிறார் விஷ்ணு. இதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இது ஒரு போலீஸ் கதை என்கிறார்கள். "ஜூங்கா'வை இயக்கிய கோகுலின் கூட்டணியிலும் ஒரு படம் ரெடியாக உள்ளது. கோகுல் இப்போது சிம்புவை வைத்து "கொரோனா குமார்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை முடித்துவிட்டு அவர் விஷ்ணுவின் படத்துக்கு வருவார் என்று சொல்கிறார்கள்.

இதற்கிடையே "ராட்சசன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷ்ணு விரும்பி வருகிறார் என்கிறார்கள்.

கார்த்தியின் திட்டம் !

கார்த்தியின் கரியரில் எப்போதும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாக இருந்ததில்லை. இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் ரிலீஸூக்கு ரெடியான சந்தோஷத்தில் இருக்கிறார். அதில் பிரேம்குமார் இயக்கிய "மெய்யழகன்' படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள்.

நலன் குமாரசாமி இயக்கிய "வா வாத்தியார்' ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதால், மூன்றாவது படமாக "சர்தார் 2' தொடங்குகிறது. கார்த்தியின் நெருங்கிய நண்பரான லக்ஷ்மண் குமார் முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது பார்ட் 2-வையும் அவரே தயாரிக்கிறார்.

"இரும்புத்திரை', "ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், 2022-ஆம் ஆண்டு இயக்கிய படம்தான் "சர்தார்'. கார்த்தியின் "வா வாத்தியார்' படப்பிடிப்பு மே மாதத்தில் நிறைவடையும் என்றும் ஜூனில் இரண்டாம் வாரத்தில் "சர்தார்' படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால், நலனின் படம் இப்போதுதான் முடிவடைந்தது.

ஆனாலும், "சர்தார் 2'க்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னொரு பக்கம் தீவிரமடைந்தன. காரணம், கடந்த பிப்ரவரி மாதமே சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் "சர்தார் 2'-க்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக "சர்தார் 2'-க்காக முறையான அறிவிப்பும், படப்பூஜைக்கான ஸ்டில்களும் வெளியாகின்றன. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடைபெறவிருக்கிறது. முதல் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்தது போல, இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிப்பாரென தெரிகிறது.

ராம்கோபால் வர்மாவுடன் விஜய்சேதுபதி!

விஜய் சேதுபதி இப்போதைக்கு இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த இரண்டில் ஆறுமுககுமார் இயக்கத்தில் "ஏஸ்' படம் முடிந்து ரெடியாக இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் "ட்ரெயின்' படமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சில நாள்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. ஆச்சர்யமாக இதற்குப் பின்னால் அவரது எந்த பட அறிவிப்புகளும் இதுவரை வரவில்லை.

இப்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தி தீவிரமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா திடீரென விஜய் சேதுபதியை வந்து சந்தித்துவிட்டு மூன்று மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றார். இப்போது அவர் ராம்கோபால் வர்மாவுக்கும் படம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.

ராம்கோபால் வர்மா ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடுகிற ஒரு நல்ல கதையைப் பிடித்துக் கொண்டு அதை படமாக்க எண்ணியிருக்கிறார். அதில் நடிக்க ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை அணுகியிருக்கிறார். அவரும் அந்த கதையை விரும்ப, டைரக்டர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியவில்லை.அதனால் அவர் நேரடியாக சென்னைக்கு வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார். அவரோடு நடிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார் விஜய் சேதுபதி. மிக விரைவில் இந்த அறிவிப்புகள் வெளிவரப் போகின்றன. அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்