ஹேமா கமிட்டி அறிக்கை: நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? – ஜெ.பி. நட்டா

மலையாள திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல்கள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (செப். 1) கேள்வி எழுப்பியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள அரசு இதனை மூடி மறைப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது,

ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் நீதி வழங்க தாமதப்படுத்துவது ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது, ஆட்டிப்படைப்பது எது?

இந்தக் குற்றச்சாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது வருத்தம் அளிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள அரசு இதனை மூடி மறைக்க விரும்புகிறது. முதல்வர் இதனை வெளிக்கொண்டுவர உதவ வேண்டும் என நட்டா குறிப்பிட்டார்.

ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

மலையாளத் திரைத் துறை பாலியல் புகார்

மலையாள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் நடிகைகளுக்கு அத்துறையைச் சேர்ந்த ஆண்களால் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் திரைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல் துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரள திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். அவர்களின் பாலியல் குற்றச்சாட்டில் பல்வேறு பிரபலங்கள் சிக்கி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள திரைப்படத் துறை (அம்மா) பொதுச்செயலாளர் பொறுப்பை நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து இயக்குநர் ரஞ்சித் விலகினார். அம்மா அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லாலும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதேபோன்று, நடிகர்கள் ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!