ஹைதியில் அகதிகள் படகு தீப்பிடித்ததில் 40 பேர் பலி!அகதிகள் படகு தீப்பிடித்ததில் 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்து எரிந்த அகதிகள் படகு
ஹைதியின் வடக்குப் பகுதியில் அகதிகள் படகு தீப்பிடித்ததில் 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஜ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி 80 பேர் படகில் புறப்பட்டனர். வடக்கு ஹைதியில் சென்று கொண்டிருந்தபோது படகு தீப்பிடித்ததில் 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
படகில் பயணித்த மீதமுள்ள 40 பேர் ஹைதியின் கடலோரக் காவல்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அகதிகளுக்கு மருத்துவ பராமரிப்பு, உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகளை ஐஓஎம் வழங்கி வருகின்றது. 11 அகதிகள் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன் கூறுகையில், ஹைதி நாட்டின் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு, புலம்பெயர்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் இல்லாததே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அவர் கூறினார்.
இந்தாண்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் அண்டை நாடுகளால் வலுக்கட்டாயமாக ஹைதிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.